Saturday, April 28, 2007

இதய மருத்துவர் சொன்ன குறள்

இன்று ஒரு இதய மருத்துவர் இந்தக் குறளை மேல்கோள் காட்டிப் பேசினார்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

அதனால் நினைவுக்கு வந்த மற்ற குறள்கள்:

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
- மன உளைச்ச்லைத் தவிர்த்து, மனதை அமைதியாக்கி இதயத்தைக் காக்கும்.

Friday, April 27, 2007

பாவை வியப்பேன்

பாவை வியப்பேன்

பாவில்வாழ் குடிபிறந்தேன்
பாவால்வந்த பைங்கூழால்
மெய் வளர்த்தேன்
அப்பாவால் தமி்ழ்பயின்றேன்

அப்பாவை மதித்திருந்தும்
பலபாவை தோய்ந்திருந்தும்
சிலபாவை நெய்திருந்தும்
பைங்கூழும் சுவைக்கவில்லை
பைந்தமிழும் சுவைக்கவில்லை

பலபாவை எழில்மகிழ்ந்தேன்
ஒருபாவை பின்மணந்தேன்
அப்பாவை என்பாவை
இன்பாவை எனப்பிழைத்தேன்

பலபாவை உளம்மகிழ்ந்தேன்
சிலபாவை உணர்ந்தாய்ந்தேன்
நற்பாவை தரும்பைந்தமிழில்
பெருகிவரும் செந்தேனில்
கசியும்மனம் உருகிநின்று
தமிழ்ப்பாவை வியப்பதனால்
இப்பாவை செயவிழைந்தேன்

Tuesday, April 24, 2007

பூவுலகில் தோன்றும் பொறாமை

பூவுலகில் தோன்றும் பொறாமை

பூவுலகம் மகிழ்கையிலே
பொறாமையேன் வருத்துவதோ?
மெய்யே உனக்குரைப்பேன்
பொறாமை நீதுறந்திடுவாய்
ஒவ்வாமை அழித்திடுவாய்
பூவுலகம் மகிழ்ந்திடவே
பொன்னுலகம் எனும்படியே
உன்னுலகம் மகிழ்ந்திடுமே

-வசந்த காலப்பூக்களின் மகரந்தத்தால்
வந்த ஒவ்வாமை தூண்டியது

பச்சைக் கிளி, முத்துச் சரம்

உலகம் சுற்றும் வாலிபனில் வரும் பாடல்

மிகச் சிறந்த ஒரு இலக்கியமாகும் பாடல்
...

பொன்பட்டாடை மூடிச்செல்லும்
தேன்சிட்டொடு மெல்ல
நான்தொட்டாடும் வேளைதோறும்
போதை என்ன சொல்ல

கைதொட்டாடும் காலம்
நேரம்போகப்போக உண்டு
*கண்பட்டாலும் காதல்வேகம்
பாதிப்பாதி இன்று

*கண்பட்டாளும் என்றாலும் இனிமையே.

Saturday, April 21, 2007

மலரும்->கனியும்<-மங்கையும்

மலரும்->கனியும்<-மங்கையும்

பூங்கொத்து முகத்தாய்
முத்தாய் நகைத்தாய்
மனத்தினை வென்றாய்
இனிதாய் மணந்தாய்
அன்பினில் கலந்தாய்
கனிந்தாய் இனித்தாய்

-மலர்க்கொடியில் பூத்த மலர், கனியாகி இனிக்கின்றது.
மனதை வென்று, மணந்து மகிழ்ந்த் பெண் கனிந்து, தாயாகி இனிக்கின்றாள்.

Friday, April 20, 2007

நான் கவிஞ்சனுமில்லை, நல்ல ரசிகனுமில்லை

இந்த வரிகளை அறிமுகத்தில் எடுத்தாண்டதால், இவ்வரிகளைப் படைத்தவரைப் பற்றிய வியப்புரைகளிலேயே ஆரம்பிக்கிறேன்.

இவ்வரிகள், திரைக்கதையில் வேறு சூழ்நிலையில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனாலும், இவ்வரிகள் கவிஞ்சரின் சிலநேர மனநிலை வெளிப்பாடோ என எண்ணிப் பார்க்கிறேன். கவிஞ்சரின் வரிகளில், வடிவங்களில், அழகில், உணர்வில், தமிழில் உள்ளம் மயங்கி நிற்பவர்கள் எத்தனை கோடி?

ஆனால், கவிஞ்சர் "நான் கவிஞ்சனுமில்லை, நல்ல ரசிகனுமில்லை" என்று பாடுகின்றார். ஏன்?

பதில் கவிஞ்சரின், மற்ற பல்வேறு பாடல்களில் இருப்பதாகத் தோன்றுகிறது. அந்த உள்ளம், மற்ற பல புலவர்களின் கவியில், தமிழில் தன்னைப் பறி கொடுத்து, மகிழ்ந்து, மயங்கி, வியப்பதாலா? அந்தக் கவிஞ்சர்களின் முன்னால் தான் ஒரு கவிஞ்சனில்லை என்று சொல்கின்றாரா? அந்த்ப் புலவர்களின் பாடல்களில் இன்சுவையில் மயங்கிய பின்னும், அவற்றில் மேலும் சுவையிருக்கிறது. நான் அதன் சுவையை முற்றிலும் உணர முடியவில்லை. ஏனென்றால், அது என் ரசனையின் குறைபாடு என்று பாடுகின்றாரா? கம்பனை, ஆண்டாளை, குற்றாலக்குறவஞ்சியை, வள்ளுவனை, பக்தி இலக்கியங்களை அக்கவி வியந்து பாடுவதை பல்வேறு பாடல்களில் கேட்கலாம்.

அந்தக் கவிஞ்சனின் பாடல்களை வியக்கும் பல கவிஞ்சர்கள், இவனே கவிஞ்சன், இவனே ரசிகன் என வியக்கிறார்கள். ஆனால், அந்தக் கவிஞ்சரோ மற்ற கவிஞ்சர்களைக் கண்டு வியக்கிறார்.

இதை எல்லாம் சேர்த்துப் பார்த்தால், தமிழின் இனிமையை நாம் முழுமையாக் அனுபவிக்காமல் தவற விடுகின்றோம் என்ற என் எண்ணம் மேலும் வலுப்படுகின்றது.

பாட்டுக்கொரு புலவன் பாரதியும்,
யாமறிந்த புலவரிலே
கம்பனைப் போல்
வள்ளுவனைப் போல்
இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமே
பிறந்த்ததில்லை
உண்மை வெறும்
புகழ்ச்சி்யில்லை

என்று பாடியிருப்பது நினைவுக்கு வருகின்றதா?

எங்கே நாம் இதெல்லாம் கவியின் கற்பனை, உயர்வு நவிற்சி அணி என்று எண்ணுவிடுவோம் என்று நினைத்துதான், பாரதி, "உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை" என்று உறுதியும் செய்கின்றாரா?

Tuesday, April 17, 2007

அறிமுகம் - வலைப்பதிவில் என்பதிவேன்?

அறிமுகம் - வலைப்பதிவில் என்பதிவேன்?

தமிழ்க் கவிதைகள், கருத்துகள் சிலவற்றைப் படிக்கும்போதும், கேட்கும்போதும், அதன் கருத்துச்சிறப்பில், வடிவழகில், அவை நினைவுப் படுத்தும் பழந்தமிழ்க் குறிப்புகளால், அளவில்லா மகிழ்ச்சியும், வியப்பும் என் மனதில் தோன்றுகின்றன. மிகக் குறைந்த் தமிழறிவும், திறனும் கொண்ட என்மீதே இவ்வளவு தாக்கம் ஏற்படுத்துகின்றன எனறால், அநத்க் கவிதைகளின், அவற்றை ஆக்கியவர்களின் திறனை, ஆழத்தை என்னென்று சொல்ல? அவ்வாறு தோன்றும் என் எண்ணங்களைப் பதிவு செய்யவும், பகிர்ந்து மகிழவும் விரும்புகின்றேன். அதனால் இந்த சிறு முயற்சி.

சில ஒப்புதல்கள், முன்குறிப்புகள்:
என் திறன்குறைவால், நான் பல உண்மைகளை, கருத்துகளைத் தவறாகவோ, குறைவாகவோ புரிந்து கொண்டு தவறான எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடும். என் எண்ணங்களும், கருத்துகளும் தவறான அடிப்படையிலும், கற்பனையினாலும் தோன்றக் கூடும். எனக்குச் சிறப்பாகத் தோன்றும் கவிதைகளும், கருத்துகளும், மற்றவர்களுக்கு சிறப்பற்றதாகத் தோன்றலாம். "*நான் கவிஞ்சனுமில்லை, நல்ல ரசிகனுமில்லை, தமிழில் வல்ல அறிஞ்சனுமில்லை"


*நன்றி: கவிஞர் கண்ணதாசன்

Saturday, April 14, 2007

முதல் குறள், முதல் குரல்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

-திருக்குறள்


இன்று தமிழ்ப் புத்தாண்டு - ஏப்ரல் 14, 2007

அறத்தின்பால் மனம்சேர்க்கும்
பொருளின்பால் நிலம்சேர்க்கும்
அன்பின்பால் மெய்சேர்க்கும்
மெய்யான மறையிதுவே
என்றென்றும் நல்லறிஞ்சர்
நன்றென்றே நவில்கின்ற
திருக்குறளின் முதல்குறளே
வலையினிலென் முதல்குரலாய்
தமிழளித்தோர் தாள்வணங்கி
தமிழ்வாழ்த்தி உமைவாழ்த்தி
தமிழ்மகிழ நுழைகின்றேன்
உடன்மகிழ அழைக்கின்றேன்.