Saturday, January 12, 2008

பொங்கல் 2008

பொங்கலோ பொங்கல்
பொங்கல் 2008
- துரை ஆறுமுகம்

மங்கையரின் கரம்பட்டு
நிலம்புகுந்த நல்நாற்று,

பசும்பட்டாய் தாம்வளர்ந்து
நீர்கொண்டு மொட்டெடுத்து

பால்கொள்ளும் பருவத்தில்,
வான்அளக்கும் கதிர்கண்டு,

ஆடவரில் அழகிந்த
ஆதவனே எனமயங்கி
தளிர்கண்டு தனைமறந்த
கதிரவனின் கரம்தொட்டு
அணைக்கின்ற வேளையிலே

நாணல்மிகச் சாயலிலிலே,
முகம்தாழ்த்தி நிலம்பார்த்து,
எழில்மேனி பொன்னாகி,
கதிராகிச் சதிராடி
காதலுடன் போராடி
இலம்புகுந்த நெல்மணிகள்

தைத்திங்கள் முதல்நாளில்
செங்கரும்பின் சிறுநிழலில்
மங்கலமாய் மஞ்சளுடன்
மாவிலையும் எழில்சேர்க்கும்
புதுப்பானை நிறைத்திருக்கும்
பசும்பாலைப் பார்த்தவுடன்

பால்கடலோ எனநினைத்து,
அமுதெடுக்கும் ஆசையுடன்,
பொன்னுடையைக் களைந்துவிட்டு,
பாலாழித் தாம்மூழ்கும்
பால்வண்ணப் பச்சரிசி

பருவத்தில் தமைஅணைத்த
ஆதவனைக் கண்டதனால்,
அன்பாலே கரம்நீட்டி
அவன்அணைத்த கோலத்தில்
பொங்குகின்ற நாணத்தில்
அமுதத்தைக் கண்டுஉண்ட
ஆனந்தம் கொண்டதனால்

உள்ளத்தே பால்பொங்க
பாலோடு பாலாக
பொங்கிடுதே! பொங்கிடுதே!
பொங்கிடும்தேன்! பொங்கிடும்தேன்!

பொங்குவது பசும்பாலோ?
உள்ளத்து அன்பாலோ?
உள்ளத்து அன்பெனவேக்
கண்டுகொள்வோம் கண்டுகொள்வோம்.

பாலோடு தாம்கலந்து
பொங்குகின்ற பொங்கலென,
பொங்குகின்ற நன்றியுடன்,
பாருலகின் உயிர்க்கெல்லாம்
சாராகி வாழ்வளிக்கும்
பகலவனை நாம்வணங்கி,
முழங்கிடுவோம முழங்கிடுவோம்.

பொங்கலோ பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.

தான்பரப்பும் தேன்தமிழில்
என்தமிழும் கலப்பதற்கு
வாய்ப்புதந்த தென்றலுக்கு
நன்றி நன்றி