என்றென்றும் வாழும் தமிழ்
அலைகடலின் நீரினையே
அமுதென்று அருந்திவிட்டு,
ஏமாந்த வானவர்கள்
வானுலகில் வாடிநிற்க,
பனிமலையில் உறைவானும்,
சினத்தினிலே முகம்சிவக்க
சிம்மத்தில் வருவாளும்,
பால்கடலில் துயில்வானும்,
வேழமென வடிவெடுத்து
மரத்தடியில் இருப்பானும்,
ஏறுமயிலேறி எங்கள்
மலைதோறும் அருள்வானும்,
தாம்அமுதாய் கொள்வதற்கு
நாடிவந்த தென்னவென்று
நாடெல்லாம் அறியாதோ?
தாம்அமுது கொள்வதற்கு
நஞ்சுதந்த வஞ்சகரால்,
கல்லாகிப் பனிபோர்த்தி
உறைந்திருந்தான் இமயத்தே,
பனிஉருகத் தான்உருகி
மறைமறந்து தனைமறந்து,
அரவாரம் தனையடக்கி
தேவாரம் பண்இசைக்க,
வான்தொடவே துள்ளியங்கு
தில்லையிலே ஆடுவது,
தமிழமுதின் சுவையிலன்றோ?
மனம்கொதித்து முகம்சிவந்து
அச்சம்தரும் சூலியுமே,
அந்தாதித் தமிழினிலே
மனம்கனிந்து அருள்பொழிந்து,
நிலவில்லாக் காரிருளில்
தமிழ்செய்த மின்னலிலே,
முழுமதியாய்த் தோன்றிடவே
தோடெடுத்துத் தான்எறிந்து,
வந்துநின்றாள் அம்பிகையாய்
தமிழமுதைக் கேட்டுஅன்றோ?
தேன்சிந்தும் பூங்கொடியும்
நிலவுலகின் கனிமரமும்
பூங்கொடியாய்க் கன்னியரும்
தரும்இனிமை அறியாமல்
பால்கடலில் துயின்றிருந்தான்.
பார்உலகின் எழிலையென்று
தேன்தமிழில் தனைக்குழைத்து,
பூங்கொடியாள் கோதைதர
துயில்துறந்தான் தமிழ்மகிழ்ந்தான்.
பாவைஎன்றும் மறப்போமோ?
கல்லானக் களிறானான்
கல்லானத் தன்மனமும்
கனிந்தென்றும் அருளுவது
தமிழ்ப்பாட்டி தமிழ்ப்பாட்டில்
அமுதெனவே பாடுகின்ற
அகவல்தனைக் கேட்டுஅன்றோ?
பழனிதரும் ஐந்தமுதின்
சுவையெல்லாம் ஐங்கனியின்
சுவையென்று நினைத்தீரோ?
இல்லை. இல்லை.
அமுதான முத்தமிழின்
சுவையினிலே கனிந்ததனால்,
பழமான பழனியவன்
மெய்யுருகித் தமிழோடு
தான்கலந்து தன்பழனித்
தேன்தனையும் கலந்ததனால்
சுவைப்பதங்கு தமிழென்றே
அறிந்து கொள்வோம்.
கற்பனையாம் அமுதுண்ட
வானவரே என்றென்றும்
வாழ்வர் என்றால்,
தானே அமுதாகி
ஆண்டவரை ஆடவைக்கும்
ஆண்டவரை ஆளவைக்கும்
ஆள்பவரை ஆடவைக்கும்
ஆண்டுதனை மாற்றவைக்கும்
தமிழென்றும் வாழுமென்று
இனிதுரையாய் கவிசெய்ய
எளியேனும் முயலுவதோ?
தமிழமுதை நாம்சுவைப்போம்.
வானவர்போல் கடலெல்லாம்
கடைந்தெடுக்கத் தேவையில்லை.
குடத்தடங்கும் அமுதமல்ல
அளந்தளந்து கொள்வதற்கு.
பகிர்ந்துண்டால் தீர்ந்திடுமோ
எனஅஞ்சி கள்வரைப்போல்
மறைத்துண்டு சுவைப்பதற்கு.
கடலாகும் தமிழமுதில்
குதித்திடுவோம் குளித்திடுவோம்
மூழ்கிநல் முத்தெடுப்போம்
குடித்திடுவோம் துள்ளிடுவோம்
துள்ளுகின்ற மனத்தினிலே
பொங்குகின்ற கவிதைகளை
தமிழ்க்கடலில் சேர்த்திடுவோம்
அள்ளிஅள்ளிக் கொடுத்திடுவோம்
மெய்யான தமிழமுதில்
மெய்மறந்து மகிழ்ந்திருப்போம்
என்றென்றும் வாழ்ந்திருப்போம்.
- துரை ஆறுமுகம்
Sunday, April 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment